2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல்


    2010 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.. யுத்த வெற்றியை முற்று முழுதாக தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட அவர் ஒரு பிரச்சார புரட்சியையே ஏற்படுத்தி எதிரணி வேட்பாளர் சரத்தை 60: 40 வீதத்தில் தோல்வியை தழுவச்செய்துள்ளார்.. அதை ஒட்டிய சிறு அலசல்தான் இங்கு தரப்படுகிறது..

    சரத் பொன்சேகா அரசியிலில் இறங்கியபோது அவருக்கு 50 வீத ஆதரவு இருந்ததை நான் உணர்ந்தேன்.. மிகுதியில் வெகுபலர் இருவருக்குமே அதரவான நிலையிலும் காணப்பட்டனர்.. அதைத்தொடர்ந்து வந்த வெள்ளைக்கொடி விடயம் மற்றும் தமிழ் கூட்டடைப்பினருடனான ஓப்பந்தங்கள் குறித்த தகவல்கள் பிரசார மேடைகளை தாக்கியபோது சுதந்திர முன்னணி அழகாக அவற்றை பயன்படுத்திக் கொண்டது.. அதன் பிறகு சரத்தின் வாக்கு வங்கியில் சொல்லும் கதைகளை வாங்கும் நிலையில் அடிமட்டச்சிங்களவர் இருக்கவில்லை.. அதே வேளை பொன்சேகாவின் பிரச்சாரமும் பெரிதாக எடுபடவில்லை.. அதேவேளை தமிழர் தரப்பில் பொன்சேகாவுக்கு ஆதரவான நிலை திரும்ப ஆரம்பித்தது.. கடைசியில் சரத் மண்ணைக்கவ்வியதோடு மட்டுமல்லாமல் ஐதேகவின் தலையிலும் மண்ணை அள்ளி குவித்துள்ளார்..



    தற்போது இரவுச்சாப்பாட்டுக்காக வெள்ளவத்தை காலிவீதியில் நடந்து போனவேளை ( ஏதாவது சிங்களவருக்கு திருநாளென்றால் பாவப்பட்ட தமிழ் பச்சிலர்களுக்கு பட்டினிதான்.. பாதிக்கடைகளை இழுத்து மூடிவிடுகிறார்கள்.. ஒரு பிஸ்கட் பெட்டியை தேடி கிலொமீட்டர் கணக்கில நடக்கவேண்டும் .. மஹிந்த மாமா இதுக்கு முதல் எதாவது பண்ணுங்க... ) வழியில் கவலையுடன் நின்ற சில நண்பர்களுடன் அவர்கள் எண்ணக்கருத்து குறித்து கலந்துரையாடினேன்.. அனைவரும் அடுத்த 7 ஆண்டுகள் மஹிந்தவின் ஆட்சி என்று ஆடிப்போய் உள்ளார்கள்.. ஏழு ஆண்டுகளில் அவர்களுக்கு pre KG போகும் வயசில் பிள்ளைகளே வந்து விடும்.. அதுவரை காலமும் மஹிந்த ஆட்சியா என அதிர்கிறார்கள்.. மற்றவன் வந்தால் என்ன செய்திருப்பானோ தெரியாது.. ஆனால் வரப்போகும் ஆட்சி குறித்து அதிருப்திபட அவர்கள் சொல்லும் காரணங்கள் அபிவிருத்தி இருக்காது.. வெளிநாட்டு முதலீடுகள் வராது.. தனியே ஊழல்களால் நாடு சுடுகாடாகிவிடும்.. குடும்ப ஆட்சியின் காரணமாக அடுத்த ஜனாதிபதியும் ராஜபக்சே குடும்பத்தவராய்தான் இருக்கும் என்று பல ..

    இன்றைய பங்குச்சந்தையின் பாரிய முதலீட்டாளர்களின் பயத்தையும் அதிருப்தியையும் நாளைதான் அறியமுடியும்.. அத்துடன் மேற்குலக நாடுகளுடனான உறவுகள் எப்படி அமையுமோ தெரியவி;ல்லை.. என் நண்பர்கள் எல்லாரும் நாளைக்கே Skilled Migration க்கு அப்ளை பண்ணுவதாக சொல்லிவிட்டு செல்லும் போது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.. இன்னும் 8 மாதங்களில் நண்பர்கள் ஒருவரும் இல்லாத நாட்டை நினைக்க அருவருப்பாக இருக்கிறது..


    பச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
    பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது...
    :P


    ஜனாதிபதிக்கு இன்னும் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.. ஓட்டு விழுந்த நிலமையை பார்த்தால் வடக்கில வச்நதம் வருவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.. கடவுளே யாழ்போகும் பஸ்களுக்கு 300 அரச வரி விதிக்காமல் இருந்தால் அதுவே காணும்.. இன்னும் பத்து வருசத்தில தமிழ்; சனமெல்லாம் பிச்சை எடுத்து சாகவேண்டி வருதோ தெரியவில்லை.. படித்தவர்களும் காசுள்ளவர்களும் ஓடிவிடுவார்கள்..மிச்ச சொச்சம்? தமிழ் கூட்டமைப்புதான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.. ( ஆனால் வழமைபோல் கடைசியில் டக்ளஸ் காலில்தான் போய் விழுவார்கள் )

    இன்றைய தேர்தல் மூலம் ததேகூ சொன்ன ஒரே செய்தி தமிழர் வேறு சிங்களவர் வேறு .. அதை எத்தனை தரம்தான் சொல்லுவது? யார் கேட்கிறார்கள்? எல்லாரும் அப்படியா ! என்று கேட்டுவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள்.. இங்கே நம்மினம் ஒரு அபிவிருத்தி கூட இல்லாமல் கிடந்து லோல் படுகிறது.. அதற்காக தமிழினம் சுய மரியாதை இழந்து மண்டியட வேண்டுமென்று சொல்லவில்லை.. மூளையை பாவித்திருக்கலாம்.. நாம் சுதாரிக்க கொஞ்சம் அவகாசம் எடுத்திருக்கலாம்.. கோத்தபாய அவர்களின் பேட்டிகளிலிருந்து அவரது சுயரூபம் அறிந்து கொள்ள கூடியதொன்று.. தமிழர் வாழும் பகுதிகளில் மட்டும் பொன்சேகா வென்றிருப்பதற்கு கட்டாயம் ஏதாவது பழிவாங்கலில் ஈடுபடுவார்.. இனி நொந்து என்ன செய்வது.. தமிழன் விரும்புவதற்கு எதிராகத்தான் எல்லாம் நடைபெறுகிறது..

    இனி தமிழ் வின்னில் ஏதாவது வெங்காயம் ஒன்று எழுதும்.. "கடுப்படைந்த பொன்சேகா ஓபாமாவை சந்தித்து போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சாத்தியம் உண்டு " அப்படி என்று.. அதைப்படித்து விட்டு புளகாங்கிதம் அடைந்து வெளிநாடு போகும் கூட்டமைப்புக்கு சுற்றுலா ஏற்பாடு நடக்கும்.. அங்கே எமில்காந்தன் நாமலுடன் தொட்டுப்புடிச்சு விளையாடிக்கொண்டிருப்பார்.. மொத்தத்தில் எல்லாரும் தமிழரை இளிச்சவாயர்கள் என்றாக்கிவிட்டார்கள்.. சே..

    தேர்தலில் பொன்சேகா ஒரு பத்து ஓட்டு மட்டும்தான் பெற்றிருப்பின் பொன்சேகா அமெரிக்காவிடம் ஏதாவது சொல்ல சாத்தியம் உண்டு.. ( அப்படிச்சொன்னாலும் ஒன்றும் நடக்க போவதில்லை) ஆனால் தற்போது 40 வீத ஓட்டு பெற்றிருப்பது நிச்சயம் அவருக்கு அரசியல் ஆசையை வளர்த்து விட்டிருக்கும்.. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தில் சரத் சாட்சி என்பது நடவாது.. ஐதேகதான் தன்னை புனர்கட்டமைப்பு செய்யவேண்டிய அவசியத்திலுள்ளது.. இதே கோலத்திலிருந்தால் வாற ஏப்ரலில் எதுவும் மிஞ்சாது.. தன்கோட்டையான கொழும்பிலயே அடிவாங்கியிக்கிறதே ?

    அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலாவது ஏதாவது நல்லது நடக்குமென நம்புவோம்.. எமக்கு இப்போது தேவை கொஞ்ச இடைவெளி.. கொஞ்ச அபிவிருத்தி.. அதற்கு கட்டாயம் வெல்லும் பக்கம் சாய வேண்டிய அவசியமுள்ளது.. ஆகவே குறித்த ஊடகங்களும் , தலைமைகளும் மக்கள் நலன் கருதி இதை கவனத்திலெடுக்கவேண்டும்..

    எனது தற்போதைய குழப்ப மற்றும் கவலைக்கு காரணம் தோற்ற பகுதிக்கு தமிழர் தரப்பு ஓட்டிட்டதன் பின்விளைவுகளை கருதியே.. இந்த நாட்டில் இனி விரம்பினாலும் இருக்க முடியுமோ தெரியவி்ல்லை.. இன்னொரு ஏழெட்டு மாதங்கள் பார்ப்போம்.. அதன் பிறகு முடிவெடுப்போம்..

    22 Responses

    1. உங்கள் எழுத்தில் ஒட்டு மொத்த இலங்கை தமிழரின் வேதனை தெரிகிறது.

      "பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது.."

      அந்த கவலையிலும் பக்குவபட்ட உங்கள் நகைச்சுவை அருமை.

      உங்களை போல் பல முனைகளிலும், யதார்த்தத்துடனும் சிந்திக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை எனக்கு நம்பிக்கை உண்டு ஒருநாள் தமிழன் தலை நிமிர்ந்து இலங்கையில் வாழ்வான்.

    2. //இன்றைய பங்குச்சந்தையின் பாரிய முதலீட்டாளர்களின் பயத்தையும் அதிருப்தியையும் நாளைதான் அறியமுடியும்//


      நாளை நமது(இலங்கை) பங்குச்சந்தையில் தவிர்க்க முடியாதபடி பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழப்போகின்றன.

      சர்வதேச முதலீட்டாளர்களின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது கணிப்பது கடினம்.

    3. //குடும்ப ஆட்சியின் காரணமாக அடுத்த ஜனாதிபதியும் ராஜபக்சே குடும்பத்தவராய்தான் இருக்கும் என்று பல //

      குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல்.....................

    4. //இனி தமிழ் வின்னில் ஏதாவது வெங்காயம் ஒன்று எழுதும்.. "கடுப்படைந்த பொன்சேகா ஓபாமாவை சந்தித்து போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சாத்தியம் உண்டு " அப்படி என்று.. அதைப்படித்து விட்டு புளகாங்கிதம் அடைந்து வெளிநாடு போகும் கூட்டமைப்புக்கு சுற்றுலா ஏற்பாடு நடக்கும்.. அங்கே எமில்காந்தன் நாமலுடன் தொட்டுப்புடிச்சு விளையாடிக்கொண்டிருப்பார்.. மொத்தத்தில் எல்லாரும் தமிழரை இளிச்சவாயர்கள் என்றாக்கிவிட்டார்கள்.. சே.. //

      :)


      தமிழ்க்கூட்டமைப்பு என்ன முடிவெடுத்தாலும் அது தமிழர்களுக்கு எதிரானதாக தானாக மாறிவிடுகிறது என?

      இம்முறை அவர்கள் இந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ஒருவகையில்.
      மஹிந்தவை ஆதரித்தால் 'எல்லாவற்றையும்' ஏற்றுக் கொண்டதாகிப் போய்விடும் என்றபடியால் அவர்களுக்கிருந்த ஒரே தெரிவு சரத் தான்...

      ஆனால் அதையும் தாண்டி அவர்கள் பொறுப்பாக செயற்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

      இனி வடக்கின் வசந்தமெல்லாம் வந்தா அது மஹிந்த என்பவர் பெரிய மனசு கொண்டவரா இருக்கோணும்.
      யாராக இருந்தாலும் ஆப்படிக்கத்தான் நினைப்பார்கள்.

      தோற்கும் தரப்பிற்கு தமிழர் வாக்குகள் விழுந்து ஆப்பு வந்திருக்கிறது.

      பார்ப்போம்...
      நல்ல அரசியல் அலசல்...


      (மஹிந்தர் பெற்றது 57.88 வீதமான வாக்குகள்... அண்ணளவு என்றாலும் 60, 40 இற்கு என்பது முடிவை இன்னும் மோசமாகக் காட்டுகிறது. )

      இலங்கை பொருளாதாரம் தான் கீழே போகப் போகுது...
      பாப்பம்..

      நடக்கிறது நடக்கட்டும்..

    5. அந்த இலங்கைப் படத்த தூக்கிவச்சுக் கொண்டு கொஞ்ச நாளைக்கு எங்கட 'தேசியவாதிகள்' காலத்தை ஓட்டிருவினம்...

      அந்தப் படத்தை வச்சு இனி நிறைய பத்தி எழுத்தாளர்கள் கட்டுரை கட்டுரையா எழுதுவினம் பாருங்கோ....

    6. உண்மையில் அரசியல் பக்கம் வரக்கூடாது என நினைத்திருந்தேன்( பதிவுகலத்திலப்பா)
      ஆனால் எனது எண்ணத்தை புல்லட் தந்திருப்பது மகிழ்ச்சி. கவலையும் தான் அதை விட மட்டக்களப்பில் "கருணை"யெல்லாத்துக்கும் செம சாத்து இதுக்காக வேண்டி நான் பிராத்தித்தன் இப்பவாவது வ. கி என்பவர்கள் தமிழர் ஒன்று என்று யோசிக்கட்டும். எதுக்கெடுத்தாலும் து.... கி எண்டு எங்களையெல்லாம் அவனோட சேர்த்துக் கதைக்காதீங்கப்பா... அவனை மட்டும் பார்க்கணும்.
      தமிழர் தான் பலர் இங்க...(மன்னிக்கவும் தவறாக சொல்லியிருநதால்)

    7. புல்லட்டுடுடுடு.... நீங்களாவது ஓடித்தப்பிருவீங்கோ புல்லட்டுட்டுட்டுட்டு...நாங்கள் என்ன பண்ணுறது இன்னும் 2 வருசத்துக்கு அசைய ஏலாது...

      நீங்கள் சொன்னமாதிரி மகிந்த பிரதர்ஸ் கட்டாயம் கடுப்பாயிருப்பாங்கள் என்ன நடக்குமோ... நடக்கட்டும் எது வேணிமின்னாலும் நடக்கட்டும் இதெல்லாம் காணாதவங்களா நாங்கள்...

    8. அய்யா சாமி நாங்களெல்லாம் ஊருக்கு திரும்பி வரவா?, வேண்டாமா?. அதை முதல்ல சொல்லும். இப்பவே வயித்தில புளியை கரைக்கிறது.

    9. /* தமிழ்க்கூட்டமைப்பு என்ன முடிவெடுத்தாலும் அது தமிழர்களுக்கு எதிரானதாக தானாக மாறிவிடுகிறது.

      இம்முறை அவர்கள் இந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ஒருவகையில்.
      மஹிந்தவை ஆதரித்தால் 'எல்லாவற்றையும்' ஏற்றுக் கொண்டதாகிப் போய்விடும் என்றபடியால் அவர்களுக்கிருந்த ஒரே தெரிவு சரத் தான்...
      */
      niyaam thaan... mm.. ippave sivappaayirunthu pachchaiyaa maarina sri lanka map-odu oppeedu seiya thodankeeddaangal...

      என்ன இருந்தாலும் நாங்கள் தனி ஈழத்துக்கு அரச செலவிலை வாக்கெடுப்பு வைச்சு முடிவு படத்திலை காட்டியிருக்கிறம். மேலைத்தேசம், கீழைத்தேசம், பிராந்திய வல்லரசு என்று எங்கள் சார்பில் ithe pol ஒற்றுமையாக அரசியல் வாழ்வில் மீண்டும் முயற்சிக்க வேண்டியது தான்.

    10. சில தமிழர்களால்தான் தமிழர்களுக்கு இந்த நிலை. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மட்டக்களப்பான் துரோகி என்று மட்டக்களப்பான் எல்லோரையும் சிலர் சொல்வார்கள்.

      மட்டக்களப்பு மக்கள் என் பக்கம் என்று சொல்லித்திரிந்தவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் நல்ல பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். கிழக்கு மாகாண மக்களின் தலைவன் நான் என்று சொல்லிக்கொண்டு மேடைகளில் கிழக்கு மக்கள் என்னோடு என்று முலன்கியவர்களுக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கிறார்கள் மட்டக்களப்பு மக்கள்.

      மட்டக்களப்பான் எல்லோரும் துரோகிகள் என்று சொல்பவர்கள் இனிமேலாவது மட்டக்களப்பு மக்கள் யார் பக்கம் என்பதனை உணர்ந்து கொள்ளட்டும்.

    11. பல நோக்கிலும் அலசி ஆராய்ந்துள்ளீர்கள் புல்லட்..
      என் பதிவில் ஏற்கெனவே நான் சில விஷயங்களைத் தொட்டுவிட்டேன்..

      நடப்பது எல்லாம் நல்லாய் நடக்கட்டும் என்று நம்பி, இப்போ பெரு மூச்சு விடுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

      அந்த இலங்கை படத்தில் தெரியாத ஒரு விஷயம்.. கொழும்பில் ராஜபக்ச வென்றிருந்தாலும் கூட, தமிழர்,முஸ்லிம்கள் செறிந்துவாழும் இடமெல்லாம் பொன்சேகா தான் வென்றுள்ளார்.

      இனி ஆட்சி 'ரொம்பவே' வளமா பலமா இருக்கும் என நம்பலாம்..
      உங்களுக்கும் எமக்கும் வளமான எதிர்காலம் அமையட்டும்..

      துன்பம் வரும்போது சிரி என்று வள்ளுவர் நம்மையெல்லாம் பார்த்து தான் சொல்லி இருக்கிறார் என்பது இந்தப் பதிவின் சில இடங்களிலும் தெரியுது..

    12. இந்தியாவும் தமிழர்கூட்டுமுன்னணியும்
      சேர்ந்து செய்த சதியால்தான் சுடச்சொன்
      னவர் வெற்றிபெற்றார்.வகுப்புவாதப்
      பூதத்தைக்கிளப்ப தகூமு சந்தர்ப்பம் ஏற்
      படுத்திக்கொடுத்தது.தகூமு எதுமுடிவு
      எடுத்தாலும் அதன் பின்னால் இந்தியா
      இருக்கிறது.இந்தியா எதிர்பார்த்து காய்
      நகர்த்தியது அது மகிந்தாவுக்கு வெற்றி
      யைப்பெற்றுக்கொடுத்துவிட்டது

    13. இதனால் கடைசியில் தமிழருக்கு நிச்சயம் நன்மைகிடைகும்.தமிழர் உரிமை மறக்கடிக்கப்படமாட்டாது.
      காலங்கடந்தாவது உலகம் தமிழரின்
      உரிமைகளைப்பெற்றுக்கொடுக்கும்
      நிலை வரும் அதை மகிந்தா ஏற்படுத்
      திக்கொடுப்பார்.

    14. இனி எங்கள் சிறுபாண்மை அரசியல் கட்சிகள் DEMAND காட்ட முடியாது.. பெரும்பாண்மையை திருப்திப்படுத்துமளவுக்கு அரசியல் செய்தால் போதும் என்ற நிலைப்பாடு வந்தால் நாங்க அதோ கதிதான்.. நம்பிக்கையுடன் இருப்போம்..

    15. @Thevesh
      //இதனால் கடைசியில் தமிழருக்கு நிச்சயம் நன்மைகிடைகும்.தமிழர் உரிமை மறக்கடிக்கப்படமாட்டாது.
      காலங்கடந்தாவது உலகம் தமிழரின் உரிமைகளைப்பெற்றுக்கொடுக்கும் நிலை வரும் அதை மகிந்தா ஏற்படுத்திக்கொடுப்பார்.//


      கேக்கிறவன் கேனையனாக இருந்தால்..... (முடிச்சு வையுங்கோ)

    16. //பச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
      பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது... :P//

      ம்ம்ம்ம்....

    17. அருமாயான அரசியல் அலசல்

      //கடவுளே யாழ்போகும் பஸ்களுக்கு 300 அரச வரி விதிக்காமல் இருந்தால் அதுவே காணும்..//

      நாங்கள் எல்லாத்துக்கும் தயார்தான், பத்து இடத்தில இறங்கி நடக்கிறதோ, இல்ல பதினெட்டு மணித்தியாலம் கப்பல்ல கிடக்கிறதோ எங்களுக்குப் புதுசில்லை

      //தமிழ்க்கூட்டமைப்பு என்ன முடிவெடுத்தாலும் அது தமிழர்களுக்கு எதிரானதாக தானாக மாறிவிடுகிறது என?
      //

      இனியாவது வெளிநாட்டில இருக்குறவங்களுக்கு அரசியல் செய்யாம இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் செய்தால் அதுவே பெரிய புண்ணியமாப் போகும்

      //இம்முறை அவர்கள் இந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ஒருவகையில்.
      மஹிந்தவை ஆதரித்தால் 'எல்லாவற்றையும்' ஏற்றுக் கொண்டதாகிப் போய்விடும் என்றபடியால் அவர்களுக்கிருந்த ஒரே தெரிவு சரத் தான்...
      //

      உண்மைதான். வேற வழி இருக்கவில்லை

      //இனி வடக்கின் வசந்தமெல்லாம் வந்தா அது மஹிந்த என்பவர் பெரிய மனசு கொண்டவரா இருக்கோணும்.
      யாராக இருந்தாலும் ஆப்படிக்கத்தான் நினைப்பார்கள்.
      //

      பின்ன? அந்தாள் யாழ்ப்பாணம் போகேக்கை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.

      //அந்த இலங்கைப் படத்த தூக்கிவச்சுக் கொண்டு கொஞ்ச நாளைக்கு எங்கட 'தேசியவாதிகள்' காலத்தை ஓட்டிருவினம்...

      அந்தப் படத்தை வச்சு இனி நிறைய பத்தி எழுத்தாளர்கள் கட்டுரை கட்டுரையா எழுதுவினம் பாருங்கோ.//

      வெளிநாட்டில இருக்கிறவங்கள உசுப்பேத்துறதுக்கு ஏதாவது வேணுமே அவங்களுக்கு

    18. @சுபா அண்ணா...

      என்னய்யா என்ர பின்னூட்டத்துக்கு மட்டுமே பதல் சொல்ல வந்த மாதிரி பின்னூட்டிருக்கிறியள்?

      எண்டாலும் என்ர கருத்தோடு உங்கட கருத்து ஒத்துப் போவதில் பெருத்த மகிழ்ச்சி.... :)

    19. பின்னூட்டங்களுக்கு நன்றிகள் நண்பர்களே.. சூரிய கதிரும் லோசண்ணரும் சொன்னது போல துன்பத்தில சிரிச்சு பழகிப்போச்சு நமக்கு..

      அச்சு பங்கு ஏதாவது வாங்கி வச்சிருந்தீங்கன்னா வித்திட்டு கடைய கட்டுங்க.. இனி இங்க உதெல்லாம் சரிவராது..

      கங்கோனும் சுபாங்கனும் சொன்னது போல அவர்கள் புத்தரோ இல்லை மறுகன்னத்தை காட்ட யேசுவோ அல்ல..நிச்சயம் பழிவாங்கல் இரக்கும்..



      சந்ரு மற்றும் ரமேஸ்.. சத்தியமாக இந்த தேர்தல் முடிவால் எனக்கு ஏற்பட்ட ஒரே சந்தோசம் எல்லாப்பிரதேச தமிழ்மக்களுக்கும் ஒரே உணர்வு இருப்பதே.. எனக்கும் கூட ஒரு தப்பான தாழ்வன கருத்தே முதலிருந்தது.. இப்போ மதிப்பாக மாறிவிட்டது.. அடிவாங்கினாலும் ஒண்டா ஒற்றுமையா வாங்குவம்..

      தங்கள் கருததுகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி

    20. இடுக்கண் வரும்போது நகுக.

      :-D

      'வளமான எதிர்காலம்' (யாருக்கு?)

      -----------------------------
      நேற்றே படித்தேன் - உங்கள் பதிவை.
      இன்னும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் இனவாதம் ஒழியவில்லை என்பது தெரிகிறது. ஹ்ம்... இன்னும் 7 வருடமல்ல என்னைக்கேட்டால் இன்னும் 20 வருடமாவது தேவை என்பேன் மாற்றம் ஏற்பட - ஆனால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

    21. //அச்சு பங்கு ஏதாவது வாங்கி வச்சிருந்தீங்கன்னா வித்திட்டு கடைய கட்டுங்க.. இனி இங்க உதெல்லாம் சரிவராது.. //

      இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை(28-01-10) 1.25 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

      இப்போதைய நிலையில் பங்கு சந்தை (ஏற்கனவே) நல்ல வளர்ச்சியை கண்டு விட்டன. உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து இன்னும் சரிவர புரியாத நிலையில் குறுகிய கால அடிப்படையில் சந்தையின் போக்கினை கணிப்பது கடினம். அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் இலங்கைப் பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.